இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும் ஒரு முக்கியமான அமைப்பாக ஜி.எஸ்.டி கவுன்சில் விளங்குகிறது. இதில் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் குடிமக்கள் செலுத்த வேண்டிய வரித் தொகை குறித்த தகவல்கள் அடங்கும்.
வரிகள் நாடு முழுவதும் நியாயமாக இருப்பதை உறுதி செய்ய இந்திய மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்துடனும் இணைந்து செயல்படுகிறது. ஜி.எஸ்.டி கவுன்சில் செய்யும் பரிந்துரைகள், நுகர்வோர் அன்றாடம் வாங்கி பயன்படுத்தும் பொருட்களுக்கு எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்பதை நேரடியாகப் பாதிக்கின்றன. இது வணிகச் செலவுகள் மட்டுமின்றி, தனிநபர்கள் தங்களது வீடுகளில் ஜி.எஸ்.டி-க்காகச் செலவிடும் தொகையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
முக்கிய அம்சங்கள்:
இந்தியாவின் இரட்டை ஜி.எஸ்.டி முறையின் கீழ், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே கூட்டு நிதிசார் முடிவெடுப்பதை முறைப்படுத்துவதற்காக 2016-இல் இந்த கவுன்சில் உருவாக்கப்பட்டது.
வரி விகிதங்களைச் சீரமைத்தல், இணக்கச் சீர்திருத்தங்கள் மற்றும் மறைமுக வரியமைப்பில் கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து ஆலோசிக்க இது அவ்வப்போது கூடுகிறது.
இதன் எடையிடப்பட்ட வாக்குப்பதிவு முறைமை (வெயிட்டட் வோட்டிங் மோட் l) நிதி அதிகாரத்தைச் சமநிலைப்படுத்துகிறது; முறைப்படியான முடிவுகளை எடுக்கக் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் எடையிடப்பட்ட வாக்குகளில் 75% பெரும்பான்மை தேவையாகும்.
கொள்கைப் பரிந்துரைகள் நாடு முழுவதும் உள்ள வணிகங்களின் விலை நிர்ணயம், நடைமுறை மூலதனச் சுழற்சி (வெயிட்டட் வோட்டிங் மோட்) மற்றும் வரி இணக்கப் பொறுப்புகளைப் பாதிக்கின்றன.
ஜி.எஸ்.டி கவுன்சில் நமக்கு ஏன் தேவை?
2017-ஆம் ஆண்டிற்கு முன்பு அமலில் இருந்த துண்டாக்கப்பட்ட மறைமுக வரி அமைப்பைச் சரிசெய்வதற்காக ஜி.எஸ்.டி கவுன்சில் நிறுவப்பட்டது. முன்னதாக பல்வேறு மத்திய மற்றும் மாநில வரிகள் (அப்காரி வரி, வாட் நுழைவு வரி போன்றவை) வரிக்கு மேல் வரி செலுத்தும் நிலையை (காஸ்கேடிங் டாக்ஸஸ்) உருவாக்கி, வரித் தாக்கல் செய்வதையும் சிக்கலாக்கின.
இந்தியாவின் இரட்டை ஜி.எஸ்.டி மாதிரியின் கீழ், மத்திய அரசு (சி.ஜி.எஸ்.டி) மற்றும் மாநிலங்கள் (எஸ்.ஜி.எஸ்.டி / யு.டி.ஜி.எஸ்.டி) இணைந்து வரிகளை விதிக்கின்றன; மாநிலங்களுக்கு இடையேயான விநியோகங்களுக்கு ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி (ஐ.ஜி.எஸ்.டி) விதிக்கப்படுகிறது. தன்னிச்சையான மாற்றங்களைச் செய்வதற்குப் பதிலாக, இந்த அடுக்கமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மாறுவதை கவுன்சில் உறுதி செய்கிறது.
ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கான முக்கியக் காரணங்கள்:
- சீரான வரி அமைப்பு: மாநிலங்களுக்கு இடையே வெவ்வேறு வரி விகிதங்கள் மற்றும் விதிகள் இருப்பதைத் தடுத்து, இந்தியாவை ஒரே தேசியச் சந்தையாக உயர்த்த ஆதரவளிக்கிறது.
- கூட்டுறவு கூட்டாட்சி (கோ-ஆப்பரேட்டிவ் ஃபெடரலிசம்): ஜி.எஸ்.டி தொடர்பான முடிவுகளில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் மாநில நிதி/வரி அமைச்சர்கள் இணைந்து செயல்பட ஒரு அதிகாரப்பூர்வ தளத்தை வழங்குகிறது.
- வருவாய் சமநிலை: வரி அடுக்குகள், விலக்குகள் அல்லது வரம்புகள் மாற்றப்படும்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களின் நிதி நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை உறுதி செய்கிறது.
- வரி இணக்கம் மற்றும் வழக்குகள் குறைப்பு: அதிகாரிகளுக்கும் வரி செலுத்துவோருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளைக் குறைக்க மாதிரிச் சட்டங்கள், விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பரிந்துரைக்கிறது.
- பொருளாதார நெகிழ்வுத்தன்மை: பெருந்தொற்றுகள், இயற்கை பேரிடர்கள் அல்லது துறைசார் நெருக்கடிகள் போன்ற அதிர்ச்சிகளுக்குச் சிறப்பு வரிகள் அல்லது நிர்வாகத் தளர்வுகள் மூலம் விரைவான கொள்கை பதிலடிகளை வழங்க இது வழிவகுக்கிறது.
இதையும் படிக்கவும்: ஜி.எஸ்.டி என்றால் என்ன மற்றும் ஜி.எஸ்.டி-யின் வகைகள்?
ஜி.எஸ்.டி கவுன்சில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது?
சரத்து 279ஏ-ன் படி, ஜி.எஸ்.டி கவுன்சில் என்பது மத்திய அரசு, அனைத்து மாநிலங்கள் மற்றும் சட்டமன்றங்களைக் கொண்ட யூனியன் பிரதேசங்களின் (டெல்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர்) பிரதிநிதிகளை உள்ளடக்கிய 33 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும். இந்தியக் குடியரசுத் தலைவரால் செப்டம்பர் 12, 2016 அன்று ஜி.எஸ்.டி கவுன்சில் உருவாக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி கவுன்சிலின் அமைப்பு, வாக்கு எடையளவு மற்றும் முடிவெடுப்பதற்கான தேவைகள் கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
| கூறு | விவரங்கள் |
| அரசியலமைப்பு அடிப்படை | 2016-ஆம் ஆண்டின் 101-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட அரசியலமைப்பின் சரத்து 279ஏ |
| தலைவர் | மத்திய நிதி அமைச்சர் |
| துணைத் தலைவர் | மாநில அமைச்சர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர் (சரத்து 279ஏ(2)-ன் படி) |
| செயலகம் (செக்ரட்டேரியட்) | புதுடெல்லியில் அமைந்துள்ளது |
| பதவிவழிச் செயலாளர் (எக்ஸ்-ஆஃபீஷியோ செக்ரட்டரி | வருவாய்த்துறைச் செயலாளர், இந்திய அரசு |
| குறைந்தபட்ச உறுப்பினர் வருகை (கோரம்) | கூட்டத்திற்கு மொத்த உறுப்பினர்களில் 50% பேர் வருகை தந்திருக்க வேண்டும் |
| வாக்கு எடையளவு (வோட்டிங் வெயிட்டேஜ்) | மத்திய அரசு: மொத்த வாக்குகளில் 1/3 பங்கு; மாநிலங்கள் மற்றும் சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்கள்: மொத்த வாக்குகளில் 2/3 பங்கு |
| முடிவெடுக்கும் வரம்பு | வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் எடையிடப்பட்ட வாக்குகளில் குறைந்தது 75% |
| முடிவெடுத்தல் | கருத்து ஒருமித்த அடிப்படையில் செயல்படும்; தேவைப்படும்போது வாக்குப்பதிவு பயன்படுத்தப்படும் |
| நிரந்தர அழைப்பாளர் | மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சி.பி.ஐ.சி) தலைவர் (வாக்களிக்கும் உரிமையற்ற அழைப்பாளர்) |
ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரைகள்
வரி விதிப்பு, வரி இணக்கம் மற்றும் வருவாய் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் கொள்கைப் பரிந்துரைகள் மூலம் இந்தியாவின் ஜி.எஸ்.டி கட்டமைப்பை வடிவமைப்பதில் ஜி.எஸ்.டி கவுன்சில் மையப் பங்கு வகிக்கிறது.
கவுன்சில், நிலையான மற்றும் சலுகை விகிதங்கள் உட்பட ஜி.எஸ்.டி வரி விகிதக் கட்டமைப்புகளைப் பரிந்துரைக்கிறது. இவை தயாரிப்பு விலை நிர்ணயம், நுகர்வோர் தேவை, பணவீக்கப் போக்குகள் மற்றும் ஒட்டுமொத்த மறைமுக வரி வசூலில் செல்வாக்கு செலுத்துகின்றன.
வருவாய் தேவைகளைச் சமூக நல முன்னுரிமைகளுடன் சமநிலைப்படுத்தவும், அத்தியாவசியத் துறைகள் மீதான வரிச்சுமையைக் குறைக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விலக்குகளை இது பரிந்துரைக்கிறது.
சிறு தொழில்களுக்கான வரி இணக்கத்தை எளிதாக்கவும், படிப்படியான முறைப்படுத்தலை ஊக்குவிக்கவும் ஜி.எஸ்.டி பதிவு மற்றும் கலவைத் திட்டங்களுக்கான (காம்போசிஷன் ஸ்கீம்ஸ்) விற்றுமுதல் வரம்புகளைப் முன்மொழிகிறது.
பரிவர்த்தனைகளுக்கான வரி வரம்பை தீர்மானிக்க 'விநியோக இடம்' (ப்ளேஸ் ஆஃப் சப்ளை) வழிகாட்டுதல்களைப் பரிந்துரைக்கிறது.
வரி நிர்வாகத்தை மேம்படுத்த 'விநியோக இட' விதிகள் மற்றும் மின்னணு இன்வாய்ஸ் கட்டமைப்புகள் மற்றும் ரிட்டர்ன் தாக்கல் அமைப்புகள் போன்ற டிஜிட்டல் வரி இணக்க மேம்பாடுகளை இது பரிந்துரைக்கிறது.
ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய அம்சங்கள்
ஜி.எஸ்.டி கவுன்சில் என்பது ஒருங்கிணைந்த மத்திய-மாநில முடிவெடுத்தல் மூலம் இந்தியாவின் ஜி.எஸ்.டி கட்டமைப்பை முறைப்படுத்தும் அரசியலமைப்பு உயர் அமைப்பாகும்.
அரசியலமைப்பு அடிப்படை: புதுடெல்லியைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு, 101-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2016-ன் கீழ் சரத்து 279ஏ-ன் மூலம் நிறுவப்பட்டது.
கட்டமைக்கப்பட்ட அமைப்பு: மத்திய நிதி அமைச்சரைத் தலைவராகவும், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் மற்றும் அனைத்து மாநிலங்களின் நிதி அல்லது வரித்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்டுள்ளது.
எடையிடப்பட்ட வாக்குப்பதிவு முறை: மத்திய அரசுக்கு மூன்றில் ஒரு பங்கு வாக்கு உரிமையும், மாநிலங்களுக்குக் கூட்டுப்பங்காக மூன்றில் இரண்டு பங்கு வாக்கு உரிமையும் கொண்டு, முடிவுகளுக்கு 75 சதவீத எடையிடப்பட்ட பெரும்பான்மை வாக்குகள் தேவையாகும்.
ஒருமித்த கருத்து சார்ந்த இயக்கம்: வாக்குப்பதிவு விதிகள் இருந்தபோதிலும், கூட்டுறவு கூட்டாட்சியை உயர்த்தியோம்ப கவுன்சில் பொதுவாக ஒருமித்த கருத்தின் மூலமே செயல்படுகிறது.
வரையறுக்கப்பட்ட அதிகாரம்: ஜி.எஸ்.டி விகிதங்கள், விலக்குகள், பதிவு வரம்புகள், மாதிரிச் சட்டங்கள், விநியோக இட விதிகள் மற்றும் சில மாநிலங்களுக்கான சிறப்பு விதிகளையும் பரிந்துரைக்கிறது.
நிர்வாகக் கட்டமைப்பு: வருவாய்த்துறைச் செயலாளர் பதவிவழிச் செயலாளராகச் செயல்படுகிறார். அவருக்குத் துணையாகத் தற்காலிகப் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளைக் கொண்ட செயலகம் செயல்படுகிறது.
முக்கிய முடிவுகள்: ஜி.எஸ்.டி விகிதங்களைச் சீரமைத்தல், e-invoicing அமலாக்கம், QRMP திட்டம் மற்றும் வரி இணக்க எளிமையாக்கல் முயற்சிகள் போன்ற முக்கியச் சீர்திருத்தங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் பின்னணி
101-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2016-ஐத் தொடர்ந்து, அரசியலமைப்பின் சரத்து 279ஏ-ன் கீழ் 12 செப்டம்பர் 2016 அன்று சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் நிறுவப்பட்டது. ஒருமுறைப்படுத்தப்பட்ட தேசிய வரி அமைப்பின் தேவையைச் சுட்டிக்காட்டி, 2004-இல் கேல்கர் குழுவால் தான் ஒருங்கிணைந்த மறைமுக வரிச் சட்டத்தின் யோசனை முதன்முதலில் முன்மொழியப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பல ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அரசியலமைப்புத் திருத்தம் குடியரசுத் தலைவருக்கு கவுன்சிலை முறைப்படி அமைக்க வழிவகுத்தது.
1 ஜூலை 2017 முதல் ஜி.எஸ்.டி-ஐ அமல்படுத்துவதற்கும், கூட்டு முடிவெடுக்கும் தளத்தை வழங்குவதற்கும் இந்த கவுன்சில் உருவாக்கப்பட்டது. கூட்டாட்சி தத்துவத்தைப் பேணி, அரசுகளுக்கு இடையே சமநிலையான வருவாய் பகிர்வைப் பராமரிக்கும் அதே வேளையில், இந்தியா முழுவதும் வரி விகிதங்கள், விலக்குகள் மற்றும் கொள்கைகளின் சீரான தன்மையை உறுதி செய்ய இது வடிவமைக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கியத்துவம்
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, நிலையான மற்றும் சீரான ஜி.எஸ்.டி கட்டமைப்பைப் பராமரிப்பதன் மூலம் இந்தியாவின் மறைமுக வரிக் கொள்கையை வடிவமைப்பதில் ஜி.எஸ்.டி கவுன்சில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சீரான வரி அமைப்பை உறுதி செய்கிறது: கவுன்சில் இந்தியா முழுவதும் சீரான ஜி.எஸ்.டி விகிதங்களையும் விதிகளையும் பராமரித்து, முந்தைய பல அடுக்கு வரி அமைப்பில் இருந்த வரிக்கு மேல் வரி செலுத்தும் நிலையை நீக்கி, சிக்கல்களைக் குறைக்கிறது.
கூட்டு முடிவெடுத்தலைச் சாத்தியமாக்குகிறது: மத்திய நிதி அமைச்சர் மற்றும் மாநிலப் பிரதிநிதிகள் இணைந்து விகிதங்கள், விலக்குகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் குறித்துப் பொதுவாக ஒருமித்த கருத்து மூலமும், தேவைப்பட்டால் 75% எடையிடப்பட்ட பெரும்பான்மை மூலமும் முடிவெடுக்க இது ஒரு முறையான தளத்தை வழங்குகிறது.
கொள்கை நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது: ஜி.எஸ்.டி சட்டங்களில் திருத்தங்களைப் பரிந்துரைக்கவும், பதிவு வரம்புகளை மாற்றியமைக்கவும், அவசரநிலைகள் அல்லது குறிப்பிட்ட பொருளாதார சூழ்நிலைகளின் போது சிறப்பு விகிதங்களை முன்மொழியவும் கவுன்சிலால் முடியும்.
பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் வருவாய் சமநிலையைப் பலப்படுத்துகிறது: நாடு முழுவதும் வரி அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஒரு பொதுவான தேசியச் சந்தையை உருவாக்க இது துணைபுரிகிறது.
ஜி.எஸ்.டி கவுன்சிலின் முடிவுகள் முக்கிய நிதித் துறைகளில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றன?
வரி விகிதங்களைத் தீர்மானித்தல், விலக்குகளை வரையறுத்தல் மற்றும் வரி இணக்க விதிகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் நிதித் துறைகளை வடிவமைப்பதில் ஜி.எஸ்.டி கவுன்சில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த முடிவுகள் விலை நிர்ணயம், நுகர்வோர் தேவை, செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் தொழில்துறைகளின் ஒட்டுமொத்த லாபத்தில் நேரடியாகச் செல்வாக்கு செலுத்துகின்றன.
காப்பீட்டுத் துறை
56-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு மைல்கல் முடிவு காப்பீட்டாளர்களுக்குப் பெரிய நிவாரணத்தைக் கொண்டு வந்தது. 22 செப்டம்பர் 2025 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தனிநபர் சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிக்கப்பட்டு, வரி விகிதம் 18%-லிருந்து 0%-ஆகக் குறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை காப்பீட்டு தயாரிப்புகளை, குறிப்பாகக் குடும்பங்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மிகவும் மலிவானதாக மாற்றியது.
இந்த ஜி.எஸ்.டி விலக்கு தனிநபர் டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ், எண்டோவ்மென்ட் பாலிசிகள் மற்றும் ஃபேமிலி ஃபுளோட்டர் திட்டங்கள் உட்பட தனிநபர் சுகாதார காப்பீடு மற்றும் அவற்றின் மறுக்காப்பீடுகளுக்குப் பொருந்தும். முதலீட்டு கூறுகளைக் கொண்ட யு.எல்.ஐ.பி-கள் மீதான நிலையை இன்சூரன்ஸ் நிறுவனம் அல்லது தொடர்புடைய சி.பி.ஐ.சி அறிவிப்பின் மூலம் சரிபார்க்க வேண்டும், ஏனெனில் யு.எல்.ஐ.பி-களின் சேமிப்பு/முதலீட்டுப் பகுதிக்கு இந்த விலக்கு சீராகப் பொருந்தாமல் போகலாம்.
இருப்பினும், முதலாளிகள் ஆதரவு அளிக்கும் கார்ப்பரேட் திட்டங்கள் உட்பட குழு சுகாதார காப்பீட்டு பாலிசிகளுக்கு (group health insurance policies) தொடர்ந்து ஜி.எஸ்.டி பொருந்தும். கூடுதலாக, தனிநபர் காப்பீட்டு பாலிசிகளுக்கு, தள்ளுபடியாகக் கருதப்படுவதால் நோ க்ளெய் போனஸ் மூலம் வரி விதிக்கக்கூடிய பிரீமியம் மதிப்பு தொடர்ந்து குறைக்கப்படுகிறது.
வங்கித் துறை
வங்கித் துறையில், பெரும்பாலான கட்டணம் சார்ந்த சேவைகளுக்கு 18% ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. இதில் அடங்குபவை:
- கடன் செயலாக்கக் கட்டணங்கள் (லோன் ப்ராசசிங் ஃபீஸ்)
- ஏ.டி.எம் மற்றும் சேவைக்கட்டணங்கள்
- லாக்கர் வாடகைக்கட்டணங்கள்
அதே நேரத்தில், வட்டி வருமானம் ஜி.எஸ்.டி வரம்பிற்கு வெளியே உள்ளது, இது நிதி நிறுவனங்களுக்கும் கடன் வாங்குபவர்களுக்கும் ஓரளவு நிவாரணம் அளிக்கிறது. ஜி.எஸ்.டி கட்டமைப்பு வங்கிகளுக்கான வரி இணக்கத் தேவைகளையும் அதிகரித்துள்ளது, குறிப்பாக மாநில அளவிலான பதிவு மற்றும் அறிக்கையிடல் தேவை காரணமாக வரி நிர்வாகம் மிகவும் சிக்கலாகியுள்ளது.
ரியல் எஸ்டேட் துறை
ஜி.எஸ்.டி கவுன்சிலின் கொள்கைகள் ரியல் எஸ்டேட் சந்தையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போதைய ஜி.எஸ்.டி விகிதங்கள்:
- மலிவு விலை வீட்டுத் திட்டங்களுக்கு 1% ஜி.எஸ்.டி (இன்புட் டாக்ஸ் கிரெடிட் இல்லாமல்)
- பிற குடியிருப்பு சொத்துக்களுக்கு 5% ஜி.எஸ்.டி (இன்புட் டாக்ஸ் கிரெடிட் இல்லாமல்)
இந்த வரி அமைப்பு பின்வருவனவற்றைப் பாதிக்கின்றது:
- சொத்து விலை நிர்ணயம்
- பில்டர்களின் லாப வரம்பு
- வாங்குபவரின் மலிவுத்தன்மை
- உள்ளீட்டு வரி வரவு கிடைப்பது
சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் கட்டமைப்பு
- தலைவர்: மத்திய நிதி அமைச்சர்.
- மத்திய உறுப்பினர்: மத்திய நிதி மற்றும் வருவாய்த்துறை இணை அமைச்சர்.
- மாநில உறுப்பினர்கள்: அனைத்து மாநிலங்களின் நிதி அல்லது வரித்துறை அமைச்சர்கள்.
- யூனியன் பிரதேச உறுப்பினர்கள்: சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் (டெல்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர்).
- மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை: 33 உறுப்பினர்கள்.
- துணைத் தலைவர்: மாநில உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்.
- செயலகம்: செயலகத்திற்கு இந்திய அரசின் வருவாய்த்துறைச் செயலாளர் தலைமை தாங்குகிறார்.
- நிரந்தர அழைப்பாளர்: சி.பி.ஐ.சி-யின் தலைவர் (வாக்களிக்கும் உரிமையற்றவர்).
குறிப்பு: அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களுக்குப் பிறகு கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, அடுத்த (57-வது) கூட்டத்தில் ஜி.எஸ்.டி கவுன்சிலில் நான்கு புதிய மாநிலப் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.
ஜி.எஸ்.டி கவுன்சிலின் செயல்பாடுகள்
மத்திய அரசும் மாநிலங்களும் வரிகளை விதிக்கும் இந்தியாவின் இரட்டை ஜி.எஸ்.டி மாதிரியின் கீழ், ஜி.எஸ்.டி கவுன்சில் சீரான விதிகளை உறுதி செய்கிறது, தவறான புரிதல்களைத் தடுக்கிறது மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சீரான வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது.
பரிந்துரைக்கப்பட்ட ஜி.எஸ்.டி விகிதங்கள்
56-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் சீர்திருத்தம் 2.0-ஐத் தொடர்ந்து, இந்தியா எளிமைப்படுத்தப்பட்ட மூன்று அடுக்கு முறைக்கு மாறியது: அத்தியாவசியப் பொருட்களுக்கு 0% (பூஜ்ஜியம்), சிறப்புப் பொருட்களுக்கு 5% மற்றும் நிலையான விகிதமாக 18%. 12% மற்றும் 28% அடுக்குகள் நீக்கப்பட்டு, முன்பு இந்த வகைகளில் இருந்த பொருட்கள் 5% அல்லது 18% அடுக்குகளில் மாற்றப்பட்டன. புகையிலை, சூதாட்டம் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்குத் தனி வரி அடுக்கு தொடர்ந்து பொருந்தும்.
விலக்குகளைக் கண்டறிதல்
ஜி.எஸ்.டி விலக்கு அளிக்கப்பட்ட அல்லது வரியற்ற பொருட்கள் மற்றும் சேவைகளைக் கண்டறிகிறது.
பதிவு வரம்புகளை நிர்ணயித்தல்
ஜி.எஸ்.டி பதிவிற்கான விற்றுமுதல் வரம்புகளைப் பரிந்துரைக்கிறது, இதில் அடங்குபவை:
- பெரும்பாலான மாநிலங்களில் சரக்கு விநியோகஸ்தர்களுக்கு ₹40 லட்சம்
- சேவை வழங்குநர்களுக்கு ₹20 லட்சம்
- சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு ₹10 லட்சம்
இந்த வரம்புகள் அறிவிப்புகள் மற்றும் வணிக வகைகளைப் பொறுத்து மாறக்கூடும்.
விநியோக இட விதிகள்
மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் மற்றும் உள்ளீட்டு வரி வரவுப் பரிமாற்றங்களுக்கு அவசியமான விநியோக இடத்தைக் கண்டறிவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
சிறப்பு விதிகள்
குறிப்பிட்ட மாநிலங்கள், பேரழிவுகள் அல்லது இயற்கை பேரிடர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட வரி விகிதங்கள் அல்லது உதவித் திட்டங்கள்.
மாதிரிச் சட்டங்கள் மற்றும் விதிகள்
அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ஏற்றுக்கொள்வதற்கான சீரான ஜி.எஸ்.டி சட்டங்கள், விதிகள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகள்.
தகராறு தீர்வு (டிஸ்ப்யூட் ரெசல்யூஷன்)
சரத்து 279ஏ(11)-ன் கீழ், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான தகராறுகளைத் தீர்ப்பதற்கான நடைமுறைகளை ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைக்கிறது; இருப்பினும், இது நீதித்துறை அல்ல.
பொருளாதாரத் தகவமைப்பு
மாறிவரும் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் உடனடி கொள்கை மாற்றங்களுக்கான பரிந்துரைகள்.
கூட்டுறவு கூட்டாட்சி
வருவாய் நலன்களைப் பாதுகாத்து, மத்திய-மாநில ஒத்துழைப்பை முறைப்படுத்தும் அதே வேளையில், ஒரே தேசியச் சந்தையைப் பராமரிக்கிறது.
இழப்பீட்டு தீர்வை கட்டமைப்பு (காம்பன்சேஷன் செஸ் ஃப்ரேம்வொர்க்)
ஆடம்பர மற்றும் தீமை விளைவிக்கும் பொருட்கள் மீது ஜூலை 2017-இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தீர்வை, முதலில் ஜூன் 2022-இல் முடிவடைவதாக இருந்தது, ஆனால் மாநிலங்களுக்கான கடன் இழப்பீடுகளைத் திருப்பிச் செலுத்துவதற்காகப் பலமுறை நீட்டிக்கப்பட்டது.
எளிமைப்படுத்தப்பட்ட வரி இணக்கம்
வரையறைகள், ரிட்டர்ன் படிவங்கள் மற்றும் வரி இணக்க நடைமுறைகளைத் தரப்படுத்துவதன் மூலம், இது வரி செலுத்துவோரின் சிரமங்களைக் குறைக்கிறது.
இதையும் படிக்கவும்
ஜி.எஸ்.டி ரிட்டர்ன் தாக்கல் என்றால் என்ன?
முடிவுரை
அரசியலமைப்பின் சரத்து 279ஏ-ன் கீழ் அமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி கவுன்சில், இந்தியாவின் ஜி.எஸ்.டி கட்டமைப்பிற்கான மிக உயர்ந்த நிர்வாக அமைப்பாகும். இது ஒருங்கிணைந்த வரிகளை உறுதி செய்கிறது, வரி இணக்கச் சிக்கல்களைக் குறைக்கிறது மற்றும் நிலையான மறைமுக வரி அமைப்பைப் பராமரிக்கிறது, இவை அனைத்துமே 2026-ஆம் ஆண்டில் வணிகங்களுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக முக்கியமானவை.

