பங்குகள் மற்றும் கிரிப்டோகரன்சி ஆகிய இரண்டுமே இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மிகவும் பிரபலமான முதலீட்டுத் தேர்வுகளாகும். இவை இரண்டிற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள், நன்மைகள் மற்றும் அபாயங்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
தற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் முதலீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து வரும் நிலையில், பணத்தைச் சேமித்து மட்டுமல்லாமல், அதை முதலீடு செய்வதன் மூலம் வருமானத்தை பெருக்க பல புதிய வழிகள் வேகமாக உருவாகி வருகின்றன. இவற்றில் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற பாரம்பரிய முறைகளும், கிரிப்டோகரன்சி போன்ற புதிய முதலீட்டு வடிவங்களும் அடங்கும். இளம் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் கிரிப்டோவை ஒரு சாத்தியமான முதலீடாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், அனைத்து முதலீட்டுகளைப் போலவே, இதிலும் பல எச்சரிக்கைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது, சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் ஆகும். இந்த முதலீட்டுத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் பணத்தைச் செலுத்துவதற்கு முன், கவனமாகவும், விழிப்புணர்வுடனும் இருப்பது அவசியமாகும்.
பங்குகள் என்றால் என்ன?
பங்குகள் என்பது அடிப்படையில் ஒரு நிறுவனத்தின் சிறு பகுதிகள் ஆகும். ஒரு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் இந்த முறை பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கை வாங்கும் நபர், அந்த நிறுவனத்தின் ஒரு பகுதியின் உரிமையாளர் ஆவார், அதன் மூலம் அந்த நிறுவனத்தின் லாபத்தில் பங்கு மற்றும் சொத்துக்களில் உரிமை பெறுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது.
இந்த பங்குகள் பல்வேறு அரசு வழிகாட்டுதல்களுக்கு இணங்க பங்குச் சந்தை மூலம் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இதில் முக்கியமாக நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளுக்கு நிதியளிக்கவும், கடனை அடைக்கவும், ஒரு புதிய தயாரிப்பு அல்லது புதிய கிளையைத் தொடங்குவது உட்பட பல காரணங்களுக்காக பங்குகளை விற்கின்றன. இந்த பங்குகளின் மதிப்பு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறுகிறது, மேலும் இது முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தருவதாகவும் அமைகிறது.
பங்குகளானது பொதுவான பங்குகள் மற்றும் முன்னுரிமைப் பங்குகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. பொதுவான பங்குகள் என்பது அதன் உரிமையாளர்களுக்கு நிறுவனத்தின் முடிவுகளில் வாக்களிக்கும் உரிமையை வழங்குகின்றன. முன்னுரிமைப் பங்குகள் என்பது முதலீட்டாளர்களுக்கு முதலிலேயே நிலையான லாபப் பங்கீட்டை வழங்குகின்றன, ஆனால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பதில்லை. உங்கள் முன்னுரிமைகள் மற்றும் தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்து நீங்கள் இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
பங்குச் சந்தையில் பணம் ஈட்ட இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. ஒன்று நிறுவனங்கள் தரும் லாபப் பங்கு , மற்றொன்று பங்கின் விலை உயர்வு ஆகியவையாகும். நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்து, தங்களின் முதலீட்டிற்கு கணிசமான வருவாயைப் பெறப் பல ஆண்டுகள் காத்திருக்கத் தயாராக இருக்கும் முதலீட்டாளர்கள் நேர்மறையான முடிவுகளைப் பெற அதிக வாய்ப்புள்ளது.
கிரிப்டோகரன்சிகள் என்றால் என்ன?
கிரிப்டோகரன்சிகள் என்பது கிரிப்டோகிராபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாக்கப்பட்ட டிஜிட்டல் பண வடிவமாகும். பல கிரிப்டோகரன்சிகள் பிளாக்செயின் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகின்றன. இது ஒரு பொதுவான, டிஜிட்டல் கணக்குப்புத்தகம் போன்றது. இதில் நடக்கும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையும், உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கணினிகளில் ஒரே நேரத்தில் பதிவாகும்.
வழக்கமாக பணத்தை ரிசர்வ் வங்கி போன்ற அரசாங்க அமைப்புகள் கட்டுப்படுத்துகின்றன. ஆனால், கிரிப்டோகரன்சிக்கு என்று எந்தவொரு மத்திய அமைப்பும் கிடையாது. எனவே இவை அரசாங்கங்களின் தலையீடுகள் அல்லது கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு இயங்குகின்றன. பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் உருவான கிரிப்டோகரன்சிகளில் பிட்காயின் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. சந்தையில் பல்வேறு சரிவுகளைச் சந்தித்த போதிலும், தற்போது அதுவே உலக அளவில் மிக மதிப்புமிக்க டிஜிட்டல் நாணயமாக நீடிக்கிறது. வங்கி போன்ற ஒரு மூன்றாவது தரப்பு இல்லாமல் இரு நபர்கள் நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்து கொள்ள கிரிப்டோ உதவுகிறது. எத்தேரியம் , டாஜ்காயின் மற்றும் பல கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு சமீபத்திய மாதங்களில் அதிகரித்து வருகிறது, மேலும் இவை பல முதலீட்டாளர்களுக்கு ஒரு சாத்தியமான தேர்வாக விளங்குகின்றன.
பங்குகள் மற்றும் கிரிப்டோகரன்சிகளின் பாதுகாப்பு:
முதலீடு என்பது இயற்கையாகவே அபாயங்கள் நிறைந்த ஒரு நிதிச் செயல்பாடாகும், ஆனால் அதைச் சரியாகக் கையாளும் போது அது நம்பமுடியாத அளவிற்கு லாபகரமானதாக மாறும். இருப்பினும், பங்குகளுக்கும் கிரிப்டோகரன்சிக்கும் இடையே சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. அதாவது, நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கும்போது, அந்த வணிகத்தின் ஒரு பகுதியையும், அதன் லாபத்தில் ஒரு பங்கையும் வாங்குகிறீர்கள். ஆனால் கிரிப்டோ என்பது ஒரு டிஜிட்டல் சொத்தை வாங்கி, அதன் மீதான உலகளாவிய தேவையும், மதிப்பும் உயரும் வரை காத்திருந்து, பின்னர் லாபத்திற்கு விற்பனை செய்வது போன்றதாகும். இவை ஒவ்வொன்றிலும் சாதக பாதகங்கள் உள்ளன.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் அதன் எதிர்கால வாய்ப்புகளை கண்காணிக்கவும், மதிப்பிடவும் வேண்டும். பங்குச் சந்தையில் இருக்கும் அபாயங்களை முறையான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு செய்வதன் மூலம் குறைக்க முடியும். எனவே, ஒரு நிறுவனத்தின் லாப நஷ்ட அறிக்கைகள், நிறுவனத்தின் வாரியம் , கூட்டாண்மைகள், பொறுப்புகள், வருவாய் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் போன்ற அடிப்படை காரணங்களை மதிப்பிடுவது முக்கியம்.
மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் பணம் பல நிறுவனங்களில் பிரிக்கப்பட்டு முதலீடு செய்யப்படுவதால், ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சியை மற்றொரு நிறுவனத்தின் லாபம் சமன் செய்யும். ஒரு நிறுவனம் திவாலாகும் போது சட்டப்படி முதலில் கடனாளிகளுக்கும், அடுத்து முன்னுரிமைப் பங்குதாரர்களுக்கும் பணம் செலுத்தப்பட வேண்டும். இறுதியாக எஞ்சியிருக்கும் தொகையே பொதுவான பங்குதாரர்களுக்கு வழங்கப்படும்.
பங்குகள் பெரும்பாலும் ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தாலும், அவை சரியான நேரத்தில் சீரடைய அதிக வாய்ப்புள்ளது. மறுபுறம், கிரிப்டோகரன்சி குறுகிய காலத்தில் சாத்தியமான பெரிய லாபத்தை அளிப்பதால் முதலீட்டாளர்களை ஈர்க்கிறது. எத்தேரியம் மற்றும் டாஜ்காயின் போன்ற நாணயங்களின் மதிப்பு, அவ்வப்போது கடுமையான சரிவுகளைச் சந்தித்தபோதிலும், கடந்த காலங்களில் அதிவேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
கிரிப்டோகரன்சி ஒரு புதிய சொத்து வடிவம் என்பதால், அது முதலீட்டாளர்களைப் பெரும் கோடீஸ்வரர்களாக்கவும் கூடும் அல்லது ஒரே நாளில் முதலீடு செய்த முழுப் பணத்தை இழக்கவும் கூடும். எனவே கிரிப்டோ சந்தை எந்த திசையில் நகரும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். இதனால் இது மிகவும் நிலையற்ற ஒரு தேர்வாக மாறுகிறது. பங்குச் சந்தையை ஒப்பிடும்போது கிரிப்டோ சந்தை பல மடங்கு கூடுதல் ஏற்ற இறக்கம் கொண்டது.
சுருக்கம்:
பங்குகள் மற்றும் கிரிப்டோகரன்சிகள் ஆகிய இரண்டுமே பல ஆண்டுகளாகப் பிரபலமடைந்து வருகின்றன. இருப்பினும், இந்த இரண்டு முதலீட்டுத் தேர்வுகளுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. முதலாவதாக, இதில் உள்ள அபாயத்தின் அளவு மாறுபடுகிறது. மற்றொன்று, அதாவது எல்லாப் பணத்தையும் ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல், ஒருவரின் விருப்பத்திற்கும், இலக்கிற்கும் ஏற்ப பங்குகள் மற்றும் கிரிப்டோ இரண்டிலும் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் ஒட்டுமொத்த முதலீட்டுத் தொகுப்பின் அபாயத்தைக் குறைக்க முடியும்.
