இந்தியாவில் முதலீடு செய்யப் பல வழிகள் உள்ளன. இருப்பினும், ரியல் எஸ்டேட் துறை முதலீட்டாளர்களின் கவனத்தையும், பெருமளவிலான பணத்தையும் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, இந்தியக் குடும்பங்களின் மொத்தச் சொத்தில் சுமார் 77% ரியல் எஸ்டேட்டிலேயே உள்ளது. ஆனால், ரியல் எஸ்டேட் முதலீடுகளில் உள்ள ஒரு முக்கியமான சவால், அதில் உள்ள குறைந்த பணப்புழக்க வசதி ஆகும்.
ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை (ஆர்இஐடி), பாரம்பரிய ரியல் எஸ்டேட் முதலீடுகளுடன் தொடர்புடைய பெரும்பாலான சவால்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. ஆர்இஐடி என்பது வருமானம் ஈட்டும் ரியல் எஸ்டேட் சொத்துக்களைச் சொந்தமாக வைத்திருக்கும், நிர்வகிக்கும் அல்லது அவற்றிற்கு நிதியளிக்கும் ஒரு நிறுவனமாகும்.
முக்கிய குறிப்புகள்:
- ஆர்இஐடி என்பது வருமானம் ஈட்டும் ரியல் எஸ்டேட் சொத்துக்களைச் சொந்தமாக வைத்திருக்கும், நிர்வகிக்கும் அல்லது அவற்றிற்கு நிதியளிக்கும் ஒரு நிறுவனமாகும்.
- ஆர்இஐடி-கள் அவை கவனம் செலுத்தும் வணிகத் துறையின் அடிப்படையில் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
- ஆர்இஐடி-கள் மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலவே செயல்படுகின்றன, எனவே அவை பல முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைத் திரட்டி, கிடங்குகள், வணிக வளாகங்கள் போன்ற பல்வேறு சொத்துக்களின் தொகுப்பில் முதலீடு செய்கின்றன.
- செயலற்ற வருமானம், போர்ட்ஃபோலியோ டைவர்சிபிகேஷன் மற்றும் பணப்புழக்கம் ஆகியவை ஆர்இஐடி-களில் முதலீடு செய்வதன் முக்கிய நன்மைகளாகும்.
ஆர்இஐடி என்றால் என்ன?
ஆர்இஐடி என்றால் என்ன என்று கேட்டால், "வருமானம் ஈட்டும் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்வதற்காக, பல முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைத் திரட்டும் ஒரு நிறுவனம்" என்பதே மிக எளிமையான விளக்கமாகும். ஆர்இஐடி-கள் மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலவே செயல்படுகின்றன. இவை, ரியல் எஸ்டேட் சொத்துக்களை நேரடியாக வாங்காமலோ அல்லது நிர்வகிக்காமலோ அதிலிருந்து வருமானம் ஈட்ட மக்களுக்கு உதவுகின்றன. இந்தியாவில் பாரம்பரிய முறையில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது சவாலான ஒரு செயலாகும். அதற்கு முழுமையான ஆராய்ச்சி தேவைப்படுவதோடு, வாடகை வருமானம் தரும் சொத்துக்களைச் சொந்தமாக்க விரும்பினால் கணிசமானத் தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
இதற்கு மாறாக, ஆர்இஐடி-களை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்பும் விதிகளும் அவற்றை மிகவும் வெளிப்படையானதாகவும், எளிதில் பணமாக்கக் கூடியதாகவும் ஆக்குகின்றன. பங்குகளைப் போலவே இவை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுவதால், ஆர்இஐடி முதலீடுகளை தேவைப்படும்போது எளிதாக விற்றுப் பணமாக மாற்ற முடியும். ஆர்இஐடி விதிகளின்படி, ஈட்டப்பட்ட வருமானத்தில் 90% முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாக வழங்கப்பட வேண்டும்.
அதில் 10% மட்டுமே நிறுவனத்தால் தக்கவைத்துக்கொள்ள முடியும். பெரும்பாலான ஆர்இஐடி-கள் வணிக ரீதியான ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்து அவற்றை வாடகைக்கு விடுகின்றன. அந்த வாடகை வருமானம் முதலீட்டாளர்களுக்குப் பிரித்து வழங்கப்படுகிறது. மாறாக, மார்ட்கேஜ் ஆர்இஐடி-கள் ரியல் எஸ்டேட் சொத்துக்களை நேரடியாகச் சொந்தமாக வைத்திருக்காமல், ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு நிதியளிக்கின்றன. அதிலிருந்து ஈட்டப்படும் வட்டி வருவாய் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாக வழங்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளின் (ஆர்இஐடி) வகைகள்:
ஆர்இஐடி-கள் அவை கவனம் செலுத்தும் வணிக வகை மற்றும் அவற்றின் பங்குகள் எவ்வாறு வர்த்தகம் செய்யப்படுகின்றன அல்லது விற்கப்படுகின்றன என்பதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. ஆர்இஐடி-களின் முக்கிய வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- ஈக்விட்டி ஆர்இஐடி-கள்: இது மிகவும் பொதுவான வகையாகும். இந்த ஆர்இஐடி-கள் வருமானம் ஈட்டும் வணிகக் கட்டிடங்கள் போன்ற சொத்துக்களை வாங்கி நிர்வகிக்கின்றன. இவற்றின் வருமானம் முக்கியமாக வாடகையிலிருந்து வருகிறது.
- மார்ட்கேஜ் ஆர்இஐடி-கள்: இவை ரியல் எஸ்டேட் சொத்து உரிமையாளர்களுக்குக் கடன் வழங்குகின்றன அல்லது அடமானக் கடன் சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. இவர்கள் வழங்கும் கடன்களிலிருந்து பெறப்படும் வட்டி மூலமே இவற்றுக்கான வருமானம் கிடைக்கிறது.
- ஹைப்ரிட் ஆர்இஐடி-கள்: இவை ஈக்விட்டி மற்றும் மார்ட்கேஜ் ஆர்இஐடி-களின் அம்சங்களை ஒருங்கிணைத்தவை ஆகும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் வாடகை வருமானம் மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் பெறுவதோடு, தங்கள் முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்தவும் முடிகிறது.
- பிரைவேட் ஆர்இஐடி-கள்: இவை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படுவதில்லை. இவை குறிப்பிட்ட சில முதலீட்டாளர்களுக்காக மட்டுமே செயல்படுகின்றன. இவை செபியால் கட்டுப்படுத்தப்படுவதில்லை மற்றும் பெரும்பாலும் தனியார் பங்களிப்பு மூலமே முதலீடுகளைத் திரட்டுகின்றன.
- பொது வர்த்தக ஆர்இஐடி-கள்: இந்த ஆர்இஐடி-கள் என்எஸ்இ, பிஎஸ்இ போன்ற பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன. இவை செபியால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன, தனிப்பட்ட சில்லறை முதலீட்டாளர்கள் இதன் பங்குகளை எளிதாக வாங்கவும் விற்கவும் முடியும்.
- பொது வர்த்தகம் செய்யப்படாத ஆர்இஐடி-கள்: இவை செபியில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படுவதில்லை. சந்தை ஏற்ற இறக்கங்களால் குறைவாகவே பாதிக்கப்படும் என்றாலும், பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் ஆர்இஐடி-களை விட இவற்றில் பணப்புழக்கம் குறைவாகவே இருக்கும்.
ஒரு நிறுவனம் எவ்வாறு ஆர்இஐடி ஆகத் தகுதி பெறுகிறது?
ஒரு நிறுவனம் ஆர்இஐடி ஆகத் தகுதி பெற, பின்வரும் அடிப்படை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- நிறுவனம் ஒரு கார்ப்பரேஷன் அல்லது அறக்கட்டளையாக அமைக்கப்பட வேண்டும்.
- இதன் பங்குகள் தடையின்றி எளிதாக மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும்.
- இது இயக்குநர்கள் குழு அல்லது அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்.
- இதில் குறைந்தது 100 பங்குதாரர்கள் இருக்க வேண்டும்.
- நிதி ஆண்டின் பிற்பாதியில், 50%-க்கும் அதிகமான பங்குகள் ஐந்து அல்லது அதற்கும் குறைவான நபர்களின் கைகளில் இருக்கக்கூடாது.
- நிறுவனத்தின் வரிக்கு உட்பட்ட வருமானத்தில் குறைந்தது 90% பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையாக வழங்கப்பட வேண்டும்.
- மொத்த வருமானத்தில் குறைந்தது 75% ரியல் எஸ்டேட் வாடகை அல்லது அடமான வட்டியிலிருந்து வர வேண்டும்.
- மொத்த முதலீட்டுச் சொத்துக்களில் குறைந்தது 75% ரியல் எஸ்டேட்டாக இருக்க வேண்டும்.
- மொத்த வருமானத்தில் குறைந்தபட்சம் 95% ரியல் எஸ்டேட், வட்டி மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளிலிருந்து வர வேண்டும்.
- மொத்தச் சொத்துக்களில் 20%-க்கு மேல் வரிக்கு உட்பட்ட ஆர்இஐடி துணை நிறுவனங்களின் (டிஆர்எஸ்) பங்குகளில் முதலீடு செய்யப்படக்கூடாது.
ஆர்இஐடி-களின் நன்மைகள்:
ஆர்இஐடி -களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் பின்வரும் பல நன்மைகளைப் பெறலாம்:
- நிலையான ஈவுத்தொகை மற்றும் வளர்ச்சி வாய்ப்பு: ஆர்இஐடி-கள் பெரும்பாலும் நிலையான ஈவுத்தொகையை வழங்குவதுடன், நீண்டகால மூலதன வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் அளிக்கின்றன.
- பல்வகைப்படுத்தல் வாய்ப்புகள்: பல ஆர்இஐடி-கள் பொதுப் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுவதால், முதலீட்டாளர்கள் தங்களின் ரியல் எஸ்டேட் முதலீடுகளை எளிதாகப் பல்வகைப்படுத்த இது வாய்ப்பளிக்கிறது.
- வெளிப்படைத்தன்மை: செபி போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளால் கண்காணிக்கப்படுவதால், ஆர்இஐடி-கள் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளைத் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். இது முதலீட்டாளர்களுக்கு வரிகள், சொத்து உரிமை மற்றும் திட்டங்களின் விவரங்கள் குறித்த தெளிவான தகவல்களை உறுதி செய்கிறது.
- எளிதாக வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல்: ஆர்இஐடி-கள் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுவதால், அவை எளிதில் பணமாக மாற்றக்கூடிய வசதி கொண்டவையாகவும், தேவைக்கேற்ப எளிதாக வாங்கவோ விற்கவோ கூடியவையாகவும் இருக்கின்றன.
- நிலையான மற்றும் பணவீக்கத்தைத் தாங்கும் வருமானம்: ஆர்இஐடி-கள் ரிஸ்க்-சரிசெய்யப்பட்ட வருமானத்தையும், நிலையான பணப்புழக்கத்தையும் வழங்குவதால், பணவீக்கம் அதிகமாக இருக்கும் காலக்கட்டத்திலும் முதலீட்டாளர்களுக்கு நம்பகமான வருவாயை அளிக்கின்றன.
ஆர்இஐடி-களின் வரம்புகள்:
ஆர்இஐடி-கள் பல நன்மைகளை வழங்கினாலும், சில வரம்புகளும் உள்ளன:
- வரிச் சலுகைகள் இல்லை: ஆர்இஐடி-கள் குறிப்பிடத்தக்க வரி விலக்குகளையோ அல்லது வரி சேமிப்பையோ வழங்குவதில்லை. உதாரணமாக, ஆர்இஐடி முதலீடுகள் மூலம் பெறப்படும் ஈவுத்தொகை முதலீட்டாளரின் வரி வரம்பிற்கு ஏற்ப வரி விதிப்பிற்கு உட்பட்டதாகும்.
- சந்தை அபாயங்கள்: ஆர்இஐடி-களின் ஒரு முக்கியக் குறைபாடு, அவை பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பதாகும். எனவே, குறைந்த ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் ஆர்இஐடி-களில் முதலீடு செய்யும் முன் இந்தச் சந்தை அபாயத்தைக் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
- குறைந்த வளர்ச்சித் திறன்: ஆர்இஐடி-கள் தங்களின் வருமானத்தில் 90% வரை முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாகப் பிரித்து வழங்குவதால், வணிக விரிவாக்கத்திற்கு மீண்டும் முதலீடு செய்ய 10% மட்டுமே மீதமிருக்கும். இதனால், பிற பங்குகளை ஒப்பிடும்போது இவற்றின் மூலதன வளர்ச்சித் திறன் குறைவாகவே இருக்கும்.
| நன்மைகள் | குறைபாடுகள் |
| அதிக பணப்புழக்கம் | வரிச் சலுகைகள் இல்லை |
| முதலீட்டு பல்வகைப்படுத்தல் | சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது |
| வெளிப்படைத்தன்மை | குறைந்த வளர்ச்சி திறன் |
| ரிஸ்க்-சரிசெய்யப்பட்ட வருமானம் | அதிக பராமரிப்பு செலவுகள் |
| வழக்கமான ஈவுத்தொகை | கூடுதல் கட்டணங்கள் |
யார் ஆர்இஐடி-களில் முதலீடு செய்ய வேண்டும்?
சொத்துக்களை நேரடியாக வாங்கி நிர்வகிக்க வேண்டிய அவசியமின்றி, வழக்கமான வருமானத்தையும் ரியல் எஸ்டேட் துறையிலான வாய்ப்புகளையும் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஆர்இஐடி முதலீடு சிறந்த தேர்வாகும். இந்த முதலீட்டு முறை உங்களின் முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவைப் பல்வகைப்படுத்தவும், பணப்புழக்கத்தை வழங்கவும் உதவுகிறது என்றாலும், சந்தை அபாயங்கள் மற்றும் வட்டி விகித மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்களை நீங்கள் நிர்வகிக்க வேண்டும்.
ஆர்இஐடி முதலீட்டைக் கருத்தில் கொள்ளக்கூடிய சில முதலீட்டாளர் சுயவிவரங்கள்:
- ஆர்இஐடி-கள் நிலையான ஈவுத்தொகையை வழங்குவதால், தொடர் வருவாயை முதன்மையாக எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது.
- உங்கள் முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவைப் பல்வகைப்படுத்தி, ஆபத்தைக் குறைத்துச் சிறந்த வருமானத்தைப் பெற விரும்பும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
- ரியல் எஸ்டேட் சொத்துக்களை நேரடியாகப் பராமரிக்கும் சிரமமின்றி முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும், நீண்டகால முதலீட்டாளர்களுக்கும் ஆர்இஐடி-கள் ஏற்றவை.
ஆர்இஐடி-களில் எப்படி முதலீடு செய்வது?
முதலீட்டாளர்கள் முக்கிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள ஆர்இஐடி-களில் மூன்று வழிகளில் பங்குகளை வாங்கலாம்:
- பங்குகள்: நேரடியாக முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், சாதாரண பங்குகளை வாங்குவது போலவே இவற்றை வாங்கலாம்.
- மியூச்சுவல் ஃபண்டுகள்: நேரடியாகப் பங்குகளை வாங்க விரும்பாதவர்கள், ரியல் எஸ்டேட் துறை சார்ந்த ஃபண்டுகள் அல்லது ஆர்இஐடி-களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் மறைமுகமாக முதலீடு செய்யலாம்.
- எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் (இடிஎஃப்-கள்): பங்குகளைப் போலவே பங்குச் சந்தையில் நேரடியாக வர்த்தகம் செய்யப்படும் இவ்வகை ஃபண்டுகள் மூலம், முதலீட்டாளர்கள் சொத்துக்களின் மீதான மறைமுக உரிமையைப் பெற்றுத் தங்கள் முதலீட்டைப் பல்வகைப்படுத்திக் கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலவே ஆர்இஐடி-களும் பல முதலீட்டாளர்களின் பணத்தைத் திரட்டிப் பெரிய வணிக மற்றும் குடியிருப்பு சொத்துக்களில் முதலீடு செய்கின்றன. மேலும், முதலீட்டாளர்கள் தங்களின் நிதி இலக்குகளுக்கு ஏற்ப சரியான ஆர்இஐடி-ஐத் தேர்ந்தெடுக்கச் சான்றளிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களின் உதவியைப் பெறலாம்.
ஆர்இஐடி முதலீடு அர்த்தமுள்ளதா?
அமெரிக்காவில் கடந்த 1960-களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்இஐடி அமைப்பு, மேற்கத்திய நாடுகளில் 60 ஆண்டுகளுக்கு மேலான நீண்ட மற்றும் வெற்றிகரமான வரலாரைக் கொண்டுள்ளது. இந்தியாவில் செபியின் முறையான வழிகாட்டுதல்களுக்குப் பிறகு, முதல் ஆர்இஐடி மார்ச்/ஏப்ரல் 2019-ல் தான் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆர்இஐடி-கள் பல தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன.
- குறைந்த மூலதனத் தேவை: இந்தியாவில் பெரிய ரியல் எஸ்டேட் சொத்துக்களைத் தனி ஒருவராக வாங்குவதற்குப் பல கோடிகள் தேவைப்படும். இது சாதாரண மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்குச் சாத்தியமற்றது. ஆர்இஐடி-களின் ஒவ்வொரு யூனிட்டும் ஒப்பீட்டளவில் மலிவானது என்பதால், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதை இது சாத்தியமாக்குகிறது.
- சிறிய முதலீட்டாளர்களுக்கு ஏற்றது: ரியல் எஸ்டேட்டில் நேரடியாக முதலீடு செய்வதில் பல குறைபாடுகள் உள்ளன, அதில் முக்கியமானது பில்டர்களின் ஆதிக்கம் மற்றும் சட்ட சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன், ஒரு சிறிய முதலீட்டாளர் சரியான விடாமுயற்சியுடன் செயல்படுவது எளிதல்ல. ஆனால் ஆர்இஐடி என்பது பங்குச் சந்தை வழியாகச் செயல்படுவதால், இந்தத் சிக்கல்கள் எதையும் முதலீட்டாளர் எதிர்கொள்ளத் தேவையில்லை.
- வெளிப்படைத்தன்மை: ஆர்இஐடி-கள் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுவதால், விலை நிர்ணயம் எளிதாகிறது. ஆர்இஐடி யூனிட்டுகளை எந்த தொந்தரவும் இன்றி எளிதாக வாங்கவும், விற்கவும் முடியும்.
- உறுதியான வருமானம்: ஆர்இஐடி-கள் ஈட்டப்பட்ட வருமானத்தில் 90%-ஐ முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகையாக வழங்க வேண்டும், இது நிலையான வருமானத்தை உறுதி செய்கிறது.
ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளை மதிப்பிடுவதற்கான குறிப்புகள்:
இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளையில் முதலீடு செய்வதற்கு முன், பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்:
- ஈவுத்தொகை வழங்குவதில் நல்ல சாதனை படைத்த நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யுங்கள்.
- ஈவுத்தொகை நிலையானது என்பதை உறுதிப்படுத்த, வளர்ந்து வரும் எஃப்எஃப்ஓ (ஃபண்ட்ஸ் ஃப்ரம் ஆபரேஷன்ஸ்) மற்றும் குறைந்த பேஅவுட் விகிதத்தைக் கொண்ட ஆர்இஐடி-களைத் தேடுங்கள்.
- பல்வேறு வகையான சொத்துக்களைக் கொண்ட ஆர்இஐடி-களில் உங்கள் நிதியை முதலீடு செய்யுங்கள்.
- முதலீடு செய்வதற்கு முன், அந்த ரியல் எஸ்டேட் அறக்கட்டளை வைத்திருக்கும் சொத்துக்களின் வகை மற்றும் தரத்தைக் கவனியுங்கள்.
- ஆர்இஐடி-களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுங்கள்.
முடிவுரை:
இந்தியாவில் ஆர்இஐடி முதலீடுகள் படிப்படியாகவும், நிலையாகவும் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்தியாவின் முதல் ஆர்இஐடி மிகப்பெரிய அளவில் முதலீட்டாளர்களின் பங்களிப்பைப் பெற்றது. பெரிய ஆர்இஐடி நிதிகள் வெறும் அலுவலகங்கள் மட்டுமல்லாமல், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் தளவாடக் கிடங்குகள் போன்ற பல்வேறு துறைகளில் முதலீடு செய்கின்றன. இத்தகைய பெரிய சொத்துகளில் தனிப்பட்ட ஒரு சாதாரண முதலீட்டாளரால் நேரடியாகப் பணத்தை முதலீடு செய்வது எளிதல்ல. ஒரு சாதாரண முதலீட்டாளர் தனது போர்ட்ஃபோலியோவை பல்துறை சார்ந்ததாக மாற்ற ஆர்இஐடி பெரிதும் உதவுகிறது.
சொத்துக்களை நேரடியாக வாங்கிப் பராமரிக்கும் தலைவலிகள் இல்லாமல், ரியல் எஸ்டேட் துறையின் லாபத்தைப் பெற விரும்பும் நபர்களுக்கு ஆர்இஐடி மிகச்சிறந்த வழியாகும். வழக்கமான ஈவுத்தொகை மூலம் தொடர்ந்து நிலையான வருமானம் ஈட்ட விரும்புவோருக்கு இது பெரிதும் உதவுகிறது. முதலீடு செய்யும் முன் அந்த அறக்கட்டளை எந்தெந்தச் சொத்துகளில் முதலீடு செய்துள்ளது என்பதை ஆராய்வது அவசியம். வட்டி விகித மாற்றங்கள் ஆர்இஐடி சந்தையைப் பாதிக்கக்கூடியவை. எனவே, ஒரு நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் நிர்வாகத்தின் தரத்தை முழுமையாக ஆராய்ந்த பிறகே முதலீடு செய்ய வேண்டும்.
